“எனக்கு நானே கொடுத்த தண்டனை” - ‘லைகர்’ தோல்வி குறித்து விஜய் தேவரகொண்டா

By செய்திப்பிரிவு

சென்னை: “படம் வெளியாவதற்கு முன்பு அதன் ரிசல்ட் குறித்து பேசக் கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். ‘லைகர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு இதுவே நான் எனக்கு கொடுத்துக் கொண்ட தண்டனை” என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த படம் ‘லைகர்’. அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் கடந்த 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா முறையில் பெரும் பட்ஜெட்டில் உருவான 'லைகர்' வெளியான முதல் நாளே எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது.

இப்படம் நடிப்பு, இயக்கம், வசனம் என அனைத்து வகையிலும் சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது .இப்படத்துக்குப் பிறகு தனது படத் தேர்வுகளில் விஜய் தேவரகொண்டா மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது, பரசுராம் இயக்கத்தில் ‘ஃபேமிலி ஸ்டார்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விஜய் தேவரகொண்டாவிடம் ‘லைகர்’ படத்தின் தோல்வி தந்த பாடம் என்ன? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “அதற்கு முன்னும் பின்னும் என்னுடைய நடவடிக்கையில் மாற்றம் இல்லை. அப்படியேதான் இருக்கிறேன். ஆனால், ஒரே வித்தியாசம், படம் வெளியாவதற்கு முன்பு அதன் ரிசல்ட் குறித்து பேசக் கூடாது என்று முடிவெடுத்துள்ளேன். இதுதான் எனக்கு நானே கொடுத்துக் கொண்ட தண்டனை” என்று விஜய் தேவரகொண்டா தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE