“இனி அதை கட்டுப்படுத்தவே முடியாது...” - ‘அரண்மனை 4’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் ஹன்சிகா, ஆன்ட்ரியா, வினய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘அரண்மனை’. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சித்தார்த் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு இப்படத்தின் மூன்றாம் பாகம் வெளியானது. ஆர்யா, ராஷிகண்ணா, சாக்‌ஷிஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஹாரர் - காமெடி ஜானரில் சீரிஸாக வெளியாகும் இப்படத்தின் நான்காவது பாகத்துக்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்தப் படத்தையும் சுந்தர்.சியே இயக்கியுள்ளார். இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - சுந்தர்.சியின் தங்கையான தமன்னாவின் மர்ம மரணம். அவரின் மரணத்துக்கு நீதி தேடும் வழக்கறிஞராக சுந்தர்.சி. அச்சுறுத்தம் அரண்மனை, நடுநடுவே வந்து செல்லும் சாமியார், பேய்க்கு புதிய பெயராக பாக், ஒளிந்து மறைந்து விளையாடும் பேய், பறக்கும் பொருட்கள் என வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகளால் நகர்கிறது ட்ரெய்லர்.

சாமியாரின் பேயாட்டம், நடிகைகள் தமன்னா, ராஷிகண்ணாவின் கிளாமர் பாடல், இறுதியில் ஒரு சாமி பாடல் இருக்கும் எனத் தெரிகிறது. அதில் குஷ்புவின் நடனம் இருப்பதற்கான சாயல்கள் வெளிப்படுகிறது. சுந்தர்.சி படங்களில் ஈர்க்கும் நகைச்சுவை வசனங்கள் எதுவும் இப்படத்தில் இருப்பதாக தெரியவில்லை அல்லது ட்ரெய்லரில் வெளிப்படுத்தாமல் இருந்திருக்கலாம்.

“ஏற்கெனவே 2 உயிர் எடுத்ததால அது பலமாயிடுச்சு. இனி மனித சக்தியால அதை கட்டுப்படுத்தவே முடியாது” என ஒலிக்கும் வசனம் ஏதேனும் மறைமுக குறியீடா என்பது நெட்டிசன்களின் கேள்வி. படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE