யார் நல்ல நடிகர்? - மேடையில் அக்‌ஷய் குமார், பிருத்விராஜ் சுவாரஸ்யம்

By செய்திப்பிரிவு

மும்பை: ‘படே மியான் சோட்டே மியான்’ படப்பிடிப்பில் பிருத்விராஜிடம் இருந்து நடிப்பு குறித்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக நடிகர் அக்‌ஷய்குமார் தெரிவித்தார்.

இந்தியில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெரோஃப் இணைந்து நடித்திருக்கும் படம் ‘படே மியான் சோட்டே மியான்’. இதனை ‘சுல்தான்’, ‘டைகர் ஸிந்தா ஹை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 26) மும்பையில் நடைபெற்றது. இதில் அக்‌ஷய் குமார், டைகர் ஷெரோஃப், பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார்.

இதில் பேசிய அக்‌ஷய் குமார், பிருத்விராஜ் நடிப்பில் நாளை வெளியாக உள்ள ‘ஆடுஜீவிதம்’ படம் குறித்து நெகிழ்ந்து பேசினார். மேலும் அப்படத்துக்காக பிருத்விராஜ் 16 ஆண்டுகள் உழைத்திருப்பதை அறிந்து மேடையில் தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். மேலும் பேசிய அவர், பிருத்விராஜிடம் இருந்து நடிப்பு குறித்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

அக்‌ஷய்குமார் அவ்வாறு சொல்லும்போது பிருத்விராஜ் நெளியவே, ‘புகழ்ச்சியை ஏற்றுக் கொள்ளுங்கள் பிருத்வி, உண்மையில் நீங்கள் மிகச்சிறந்த நடிகர்’ என்று புகழ்ந்தார். உடனடியாக இடைமறித்த பிருத்விராஜ், “இது உங்களிடமிருந்து வருவதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை” என்றார். இதற்கு பதிலளித்த அக்‌ஷய்குமார், “நான் உங்களைவிட அதிக படங்களில் நடித்துவிட்டதால் சொல்கிறீர்களா? என்னை விட நீங்கள்தான் மிகச்சிறந்த நடிகர்” என்று கூறினார்.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடுஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE