மும்பை ஹூக்கா பாரில் சோதனை: இந்தி பிக்பாஸ் வெற்றியாளர் முனவர் ஃபரூக்கி மீது வழக்கு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பையில் உள்ள ஹூக்கா பார் ஒன்றில் திடீரென நடத்தப்பட்ட சோதனையின்போது. இந்தி பிக்பாஸ் சீசன் 17 வெற்றியாளர் முனவர் ஃபரூக்கி உள்ளிட்ட சிலரை போலீஸார் தடுப்புக் காவலில் எடுத்தனர்.

மும்பையின் ஃபோர்ட் பகுதியில் உள்ள சட்டவிரோதமாக இயங்கிவந்த ஹூக்கா பார் ஒன்றில் நேற்று (மார்ச் 26) இரவு, மும்பை காவல்துறையின் சமூக சேவைப் பிரிவு அதிகாரிகள் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

இரவு 10.30 முதல் அதிகாலை ஐந்து மணி வரை நடந்த இந்த சோதனையின் முடிவில், ஹெர்பல் ஹூக்கா பார் என்ற பெயரில் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பாரில் இருந்த சிலரையும் போலீஸார் தடுப்புக் காவலில் எடுத்தனர். அதில் பிக்பாஸ் சீசன் 17 வெற்றியாளர் முனவர் ஃபரூக்கியும் இருந்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

32 வயதாகும் முனவர் ஃபரூக்கி, ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞர். ராப் பாடுவதிலும் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியில் இந்து கடவுள்களை அவமதித்ததாக கூறி கைது செய்யப்பட்டார். அதன்பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பிக்பாஸ் 17வது சீசனில் கலந்து கொண்ட முனவர், வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE