“நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை” - சத்குரு குறித்து கங்கனா உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள சத்குரு விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

கடந்த 17-ம் தேதி கடும் தலைவலி காரணமாக சத்குரு டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைப் பகுதியில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இடது காலும் பலம் இழக்கத் தொடங்கியது. இதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்குரு விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்கனா, “இந்த விஷயம் குறித்து அறிந்ததிலிருந்து நான் உணர்ச்சியற்றவளாக இருக்கிறேன். இந்த கடுமையான வலியுடன் சத்குரு ஜி, பிரம்மாண்டமான சிவராத்திரி நிகழ்வை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல், எந்தவொரு கூட்டத்தையும் அல்லது சந்திப்பையும் கூட தவிர்க்கவில்லை. விரைவில் குணமடையுங்கள். நீங்கள் இல்லாமல் நாங்கள் ஒன்றுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல மற்றொரு பதிவில், “இன்று சத்குரு ஜி ஐசியூ படுக்கையில் இருப்பதைப் பார்த்தபோது, திடீரென்று அவரது இருப்பு குறித்த உண்மை என்னைத் தாக்கியது. இதற்கு முன் அவரும் நம்மைப் போல் எலும்பு, ரத்தம், சதை கொண்ட ஒரு மனிதன் என்று எனக்கு தோன்றியதே இல்லை. கடவுளே நிலைகுலைந்து விட்டதைப் போல உணர்ந்தேன், பூமி இடம்பெயர்ந்து விட்டதைப் போலவும், வானம் என்னை கைவிட்டுவிட்டதைப் போலவும் உணர்ந்தேன், என் தலை சுற்றுவதைப் போல உணர்கிறேன்.

இந்த யதார்த்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் இதை நம்ப வேண்டாம் என்று முடிவு செய்தேன். பின்னர் திடீரென்று நான் உடைந்து அழுதேன். இன்று லட்சக்கணக்கான மக்கள் (பக்தர்கள்) என்னுடன் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். எனது வலியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் நன்றாக இருக்க வேண்டும், இல்லையெனில் சூரியன் உதிக்காது, பூமி நகராது. இந்த தருணம் உயிரற்ற நிலையில் உறைந்திருக்கிறது” என்று கங்கனா பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE