‘பெரியோனே என் ரஹ்மானே’ - மெய்மறக்க செய்யும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை @ ஆடுஜீவிதம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் 28-ம் தேதி இந்தப் படம் வெளிவர உள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘பெரியோனே என் ரஹ்மானே’ வீடியோ பாடல் தமிழில் வெளியாகி உள்ளது.

இந்த பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் சில சீக்வென்ஸ்களில் வருகிறார். சுட்டெரிக்கும் வெயில், பாலைவனம், ஒட்டகங்கள், பாறை, மணல் பரப்பு, பரந்த வானம், மாயை நிறைந்த அந்த இயற்கை சூழலுக்கு மத்தியில் பயணிக்கும் புகைவண்டி என இந்த பாடலின் வீடியோவில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ஃப்ரேமும் அந்த பகுதியின் வாழ்வியலை விவரிக்கும் வகையில் நகர்கிறது. இந்த இடத்தின் சூழலை அறியும் நோக்கில் அங்கு நேரடியாக சென்று அந்த உணர்வை பெற்று, அதற்கு ஏற்ப இசையமைத்துள்ளதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள மான்டேஜ் காட்சிகளில் ஒட்டகங்கள் மற்றும் ஆடுகளை பராமரிக்கும் பணியை கவனிக்கும் நபராக பிருத்விராஜ் வருகிறார். அதோடு தனிமை சிறையில் அயலகத்தில் தவிக்கும் அவரது தவிப்பை விவரிக்கும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது. அதற்கு ஏற்ப பாடல் வரிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஜித்தின் ராஜ் இந்த பாடலை பாடியுள்ளார். ஸ்டூடியோவில் சேர்த்த ஒலிக்கோர்வை மட்டுமல்லாது அந்தப் பகுதியில் இயற்கையாக காணப்படும் அமைதி மற்றும் அதனோடு அவ்வப்போது சேர்ந்து ஒலிக்கும் காற்றின் ஓசையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆடுஜீவிதம்: மலையாள சினிமாவில் இந்த ஆண்டு பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

வீடியோ லிங்க்..

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE