கேரளாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் பட ஷூட்டிங்!

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: நடிகர் விஜய் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படத்தின் படப்பிடிப்புக்காக கேரளா செல்கிறார். அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கடைசியாக விஜய் கடந்த 2011-ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் வெளியான ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்புக்காக 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் கேரளா சென்றார். இதையடுத்து தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு செல்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் ‘தி கோட்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் நாளை (மார்ச் 16) கேரளாவின் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் விஜய் கேரளா செல்கிறார். படப்பிடிப்பைத் தொடர்ந்து அவர் ரசிகர்களை சந்திப்பார் என தெரிகிறது.

தமிழகத்துக்கு இணையாக கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். அண்மையில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படத்தின் இயக்குநர் சிதம்பரம் பேட்டி ஒன்றில், “விஜய் படம் வெளியாகும்போது கேரளா திருவிழா போல காணப்படும்” என தெரிவித்திருந்தார். அதேபோல விஜய்யின் ‘லியோ’ படமும் கேரளாவில் நல்ல வசூலை ஈட்டியது.

தி கோட்: விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். "The Greatest of All Time" என பெயரிடப்பட்டுள்ளது. படம் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE