தமிழில் ‘ராஜா ராணி ’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி . ‘மெர்சல் ’, ‘ தெறி ’, ‘பிகில்’ படங்களை இயக்கிய அவர், ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கினார். பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை அட்லி இயக்க இருக்கிறார். ஷாருக்கான், விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை இயக்க பேசி வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், அடுத்தப் படத்துக்கு தனது சம்பளத்தை ரூ.60 கோடியாக அட்லி உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இது உண்மை என்றால், அதிக சம்பளம் வாங்கும் தமிழ் இயக்குநராக அட்லி இருப்பார்.அல்லு அர்ஜுன் இப்போது சுகுமார் இயக்கும் ‘புஷ்பா 2’ படத்தில்நடித்து வருகிறார். அதை முடித்துவிட்டு அட்லி படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.