நடிகரும், இயக்குநருமான சூரிய கிரண் காலமானார்

By செய்திப்பிரிவு

சென்னை: ‘படிக்காதவன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கவனம் பெற்ற சூரிய கிரண் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 48.

‘கல்லுக்குள் ஈரம்’, ‘மௌன கீதங்கள்’, ‘படிக்காதவன்’, உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக கவனம் ஈர்த்தவர் நடிகர் சூரிய கிரண். மாஸ்டர் சுரேஷ் என்ற பெயரை பின்னாளில் அவர் சூரிய கிரண் என மாற்றிக்கொண்டார். ‘மௌன கீதங்கள்’ படத்தில் வரும் ‘டாடி டாடி ஓ மை டாடி’ புகழ்பெற்ற பாடலின் மூலம் குழந்தை நட்சத்திரமாக கவனம் பெற்றார்.

அதேபோல ‘படிக்காதவன்’ படத்தில் ரஜினியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சத்யம்’, ‘தனா 51’, ‘பிரம்மஸ்திரம்’, ‘ராஜூபாய்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

நடிகை வரலட்சுமி நடித்த ‘அரசி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம், விரைவில் வெளியாகவுள்ளது. ‘காசி’, ‘சமுத்திரம்’ படங்களில் நடித்த கல்யாணியை கடந்த 2010-ம் ஆண்டு மணமுடித்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

சென்னையில் வசித்து வந்த சூரிய கிரண், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE