வலியும் வலுவான காட்சிகளும்: பிருத்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ ட்ரெய்லர் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: பிருத்விராஜ் நடித்துள்ள ‘ஆடுஜீவிதம்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படம் மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

மலையாள சினிமாவின் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மிக முக்கியமான படம் ‘ஆடு ஜீவிதம்’. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய ‘ஆடு ஜீவிதம்’ நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகிறது. படத்தை ப்ளஸ்ஸி இயக்க, பிருத்விராஜ், அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுனில் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்தின் ஒலிக் கலவையை ரசூல் பூக்குட்டி கவனிக்கிறார்.

வீட்டுக் கடனை அடைக்க அரேபிய தேசத்திற்கு புலம்பெயரும் மலையாளி ஒருவர் அங்கு சென்று ஆடு மேய்ப்பவராக மாறுவதையும் அதைத் தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘ஆடு ஜீவிதம்’ நாவலின் கதை. இதை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? - “யாராலும் வெளியே செல்ல முடியாது” என வசனத்துடன் தொடங்கும் ட்ரெய்லரில் அடுத்து எந்த வசனங்களும் இல்லை. தொடர்ந்து ஒரு தனி நபரின் போராட்டமாக விரியும் காட்சிகள் கதை சொல்கின்றன. பாலை வனமும், வெயிலும், உருமாறிய பிருத்விராஜின் உடலும் காட்டப்படுகிறது.

ஆடு ஒன்றின் கண்ணிலிருந்து பிருத்விராஜின் தோற்றத்தைக் காட்டும் காட்சி ஈர்க்கிறது. பாலைவனத்தில் அந்த வெயிலில் மாட்டிக்கொண்டு தவிக்கும் ஒருவரின் கதையாக அழுத்தமான காட்சிகளுடன் படம் உருவாகியிருப்பதை உணர்த்தும் ட்ரெய்லர் 28-ம் தேதி படத்தைக்காணும் ஆர்வத்தை தூண்டுகிறது. ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE