நடிகர் அஜித்துக்கு மூளையில் கட்டியா? - மேலாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அஜித்குமார், ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தபோது அவரின் நெருங்கிய நண்பரான கலை இயக்குநர் மிலன் திடீரென்று மரணமடைந்தார். இது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அஜித் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சமீபத்தில் பரிசோதனை மேற்கொண்டார். அப்போது மூளையில் இருந்து காதுக்கு வரும் நரம்பில் புடைப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதை எப்போது வேண்டுமானாலும் சரி செய்துகொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அஜித்குமார் உடனடியாக செய்துவிடலாம் என்றார். இதையடுத்து அவருக்குச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதுபற்றி அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா கூறும்போது, “அஜித்துக்கு மூளையில் கட்டி என்பதில் உண்மையில்லை. இது ஆஞ்சியோ போன்ற சிகிச்சைதான். அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுவிட்டார் ” என்றார்.

வரும் 18-ம் தேதி முதல் விடாமுயற்சி படப்பிடிப்பில் அவர் பங்கேற்க இருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE