‘அனிமல்’ வெற்றி: திருப்பதியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மொட்டையடித்து சாமி தரிசனம் 

By செய்திப்பிரிவு

திருப்பதி: ‘அனிமல்’ திரைப்படம் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து அப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொட்டையடித்து சாமி தரிசனம் செய்தார்.

தெலுங்கு இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர் கதாநாயகனாக நடித்த படம், ‘அனிமல்’. இதில், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல், அனில் கபூர் உட்பட பலர் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.900 கோடி அளவில் வசூலித்தது. ஓடிடியிலும் சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படம் அதன் ஆணாதிக்க கருத்துகளுக்காக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில், திருப்பதி, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மொட்டையடித்து சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள், அவரது அடுத்த படம் என்ன என்று கேள்வி எழுப்பியபோது, பிரபாஸ் நடிக்க உள்ள ‘ஸ்பிரிட்’ படத்தில் அடுத்ததாக கவனம் செலுத்தி வருவதாக சந்தீப் ரெட்டி தெரிவித்தார்.

’அனிமல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற கருத்துகள் குறித்து எழுத்தாளர் ஜாவேத் அக்தர், நடிகை ராதிகா, நடிகர் பார்த்திபன், கங்கனா ரனாவத் உள்ளிட்ட இந்திய திரையுலக பிரபலங்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, இப்படத்தை பார்க்க வேண்டாம் என்று தன் மகள்கள் எச்சரித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE