ரூ.100 கோடியை நெருங்கும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ - தமிழகத்தில் கூடும் வசூல்!

By செய்திப்பிரிவு

சென்னை: மலையாளத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் விரைவில் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை நெருங்கி வருகிறது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தை சிதம்பரம் எஸ் பொடுவால் இயக்கியுள்ளார். சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஷி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 7 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடி வசூலை குவித்தது. இதற்கு முக்கிய காரணம் தமிழ் ரசிகர்களின் வரவேற்பு. ‘குணா’ குகையில் நடக்கும் கதையும், இளையராஜா இசையும் தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

படம் தற்போது வரை உலக அளவில் ரூ.75 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு திரையரங்குகளில் வேலை நாளான இன்று (திங்கள்கிழமை) இரவுக்காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகியுள்ளன. கடந்த 3 நாட்களாக கேரளாவைக் காட்டிலும், தமிழகத்தில் வசூல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை படம் கேரளத்தில் ரூ.3.43 கோடியை வசூலித்தது. தமிழகத்தில் ரூ.4.25 கோடி வசூலை குவித்தது. விரைவில் படம் ரூ.100 கோடியை வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE