மலையாள படத் தலைப்பில் ‘பாரத்’ என்பதை தவிர்க்க சென்சார் போர்டு உத்தரவு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: மலையாளத்தில் வெளியாக உள்ள படம் ஒன்றின் தலைப்பில் இடம்பெற்றுள்ள ‘பாரத்’ என்ற வார்த்தையை தவிர்க்குமாறு படக்குழுவுக்கு சென்சார் போர்டு உத்தரவிட்டுள்ளது.

டி.வி.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாள படம் ‘ஒரு பாரத சர்கார் உல்பணம்’ (Oru Bharatha Sarkar Ulpannam). இந்தப் படத்தில் சுபிஷ் சுதி, ஷெல்லி, கவுரி கிஷன், அஜு வர்கீஸ், வினீத் வாசுதேவ் மற்றும் ஜாஃபர் இடுக்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அஜ்மல் ஹஸ்புல்லா படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தைப்பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்தின் தலைப்பில் உள்ள ‘பாரத்’ என்ற வார்த்தையை தவிர்த்தால் மட்டுமே சான்றிதழ் கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட வேண்டும் என்பதால் தணிக்கை குழுவின் உத்தரவுக்கு படக்குழுவினர் செவிசாய்க்க உள்ளதாக கூறப்படுகிறது. காரணம் இப்படம் மார்ச் 1-ம் தேதி வெளியாக இருந்தது. திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் காரணமாக படம் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கு மேலும் தாமதப்படுத்த முடியாது என்பதால் தலைப்பில் உள்ள ‘பாரத்’ என்ற வார்த்தையை படக்குழுவினர் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE