தொடர் வரவேற்பால் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கு காட்சிகள் அதிகரிப்பு!

By செய்திப்பிரிவு

கொச்சி: மலையாளத்தில் வெளியாகியுள்ள ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கு தொடர்ந்து நேர்மறை விமர்சனங்கள் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் அப்படத்தின் காட்சிகளை திரையரங்க நிர்வாகங்கள் அதிகரித்துள்ளன.

சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் கடந்த 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் சவுபின் ஷாயிர், ஸ்ரீநாத் பாஸி, பாலு வர்கீஸ், காலித் ரஹ்மான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ‘குணா’ படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ‘குணா குகை’யில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினர் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் அமைச்சர் உதயநிதியும் படக்குழுவினரை நேரில் பாராட்டினார்.

இந்த நிலையில், படத்தைப் பார்த்த பலரும் சமூக வலைதளங்களில் படம் குறித்து பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து இப்படத்துக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள பிரபல திரையரங்குகளில் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கு காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் ரோகிணி, ஜிகே சினிமாஸ், வரதராஜா உள்ளிட்ட திரையரங்குகள் மற்றும் கோவையில் உள்ள பிராட்வே சினிமாஸ் உள்ளிட்ட திரையரங்க நிர்வாகங்கள் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்துக்கான காட்சிகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

வாசிக்க >> Manjummel Boys Review | மலைகளின் இளவரசியும் மல்லு நண்பர்களின் த்ரில் அனுபவங்களும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE