பா.ரஞ்சித் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ்: படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

இயக்குநர் பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் சார்பாக ’பரியேறும் பெருமாள்’, ‘ரைட்டர்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தயாரித்துள்ளார். அசோக்செல்வன் நடிப்பில் அவர் தயாரித்த ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ’ஜெ.பேபி’ படத்தை தயாரித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவருடன் ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், ஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று (பிப்.29) தொடங்கியது. இதனை இயக்குநர் பா.ரஞ்சித் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்புப் பணிகளை செல்வா ஆர்.கே மேற்கொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE