10 நாட்களில் ரூ.50 கோடி: வசூலில் மம்மூட்டியின் ‘பிரமயுகம்’ மாஸ்! 

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: மம்மூட்டி நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படம் 10 நாட்களில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022, 2023-ஆம் ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் ரூ.50 கோடி வசூலை கடந்துள்ளது.

மலையாளத்தில் வெளியான ‘பூதகாலம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராகுல் சதாசிவம். அவரது இயக்கத்தில் கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரமயுகம்’. மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அர்ஜூன் அசோகன், சித்தார்த் பரதன், மணிகண்டன் ஆச்சாரி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கறுப்பு - வெள்ளை திரையனுபவத்துடன் உருவான இப்படத்துக்கு கிறிஸ்டோஃபர் சேவியர் இசையமைத்துள்ளார். ஹாரர் - த்ரில்லர் பாணியிலான கதையைக் கொண்ட இப்படம் மிகச்சிறந்த திரையனுபவத்துக்கு உத்தரவாதம் அளிப்பதாக ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதன் எதிரொலியாக ரூ.25 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் படம், வெளியான 10 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளது. கடந்த 23-ம் தேதி முதல் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

மம்மூட்டியின் பாக்ஸ் ஆஃபீஸ்: கடந்த 2022-ம் ஆண்டு வெளியான மம்மூட்டியின் ‘பீஷ்மபருவம்’ திரைப்படம் ரூ.50 கோடி வசூலைக் கடந்தது. கடந்த ஆண்டு வெளியான ‘கண்ணூர் ஸ்குவாட்’ ரூ.100 கோடியை வசூலித்தது. தற்போது ‘பிரமயுகம்’ ரூ.100 கோடியை நோக்கி பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE