“நான் ரெடி” - விஜய் படத்தை இயக்குவது குறித்து கவுதம் வாசுதேவ் மேனன்

By செய்திப்பிரிவு

சென்னை: “விஜய்யின் இறுதிப் படத்தை இயக்க நான் ரெடியாகத்தான் இருக்கிறேன். ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நிச்சயம் வரும்” என இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

வருண் நடித்துள்ள ‘ஜோசுவா இமை போல் காக்க’ (Joshua Imai Pol Kaakha) படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், “என்னுடைய ‘ஜோசுவா இமை போல் காக்க’ திரைப்படம் மார்ச் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இது என்னுடைய 19-வது படம். ‘துருவ நட்சத்திரம்’ வெளியானால் அது என்னுடைய 20-வது படமாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கிறது. வருண் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஐசரி கணேஷ் படத்தை தயாரித்துள்ளார். கரோனோ உள்ளிட்ட காரணத்தால் படம் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது” என்றார்.

அவரிடம் ‘துருவ நட்சத்திரம்’ படம் எப்போது ரிலீசாகும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘வரும்’ என பதிலளித்தார். தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளித்த அவர், “த்ரிஷா மட்டுமல்ல, எந்தப் பெண்களைப் பற்றி தவறாக பேசினாலும், அது தவறுதான்” என்றார். விஜய்யின் இறுதிப் படத்தை இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு, “கண்டிப்பாக இயக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

மேலும், படம் இயக்குவதில் ஏற்பட்ட இடைவேளி குறித்த கேட்டபோது, “ஒரு வருடம் படம் இயக்கவில்லை என்றாலே களத்தில் இல்லை என்று கூறுகிறீர்கள். படங்களை மறு வெளியீடு செய்வதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். ‘வாரணம் ஆயிரம்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளன. என்னுடைய படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் தான் படத்தை இயக்கவில்லை” என பதிலளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE