தனுஷின் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் பிப்.19-ல் ரிலீஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் இயக்கி நடிக்கும் ‘டி50’ படத்தின் முதல் தோற்றம் வரும் 19-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் 50-வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். வட சென்னையை களமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ‘ராயன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி இப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பில் ரத்தம் வழிய தனுஷ் பின்புறமாக நின்றுகொண்டிருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் தற்போது தமிழ் சினிமா ட்ரெண்டிங்கான, ரத்தமும், சதையுமாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.

முதல் தோற்றத்தில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது. முன்னதாக, தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ‘டி50’ தனுஷ் இயக்கும் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE