சென்னை: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உட்பட பலர் நடித்த இந்தி படம், ‘அனிமல்’. இதில் அதிக வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாகக் கூறி ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை கடுமையான விமர்சனத்தை முன் வைத்தனர். குறிப்பாக சில நடிகர்களும் அந்தப் படத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் நடிகை ஹூமா குரேஷி, அனிமல் படத்தைப் பாராட்டிப் பேசியுள்ளார். இவர் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்தவர். அவர் கூறும்போது, “அனிமல் படத்தை ரசித்துப் பார்த்தேன். அனைத்துவிதமான படங்களும் உருவாக்கப்பட வேண்டும்.
அதைப் பார்ப்பதா, வேண்டாமா என்பது பார்வையாளர்கள் விருப்பம். அனிமல் படம் போல, கையில் இயந்திர துப்பாக்கியை வைத்துக்கொண்டு பலரைக் கொல்வது போன்ற ஆக்ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.