“என்னை பிரதமராக பார்க்க மக்கள் விரும்பமாட்டார்கள்” - ‘எமர்ஜென்சி’ படத்தை குறிப்பிட்டு கங்கனா

By செய்திப்பிரிவு

மும்பை: “நான் ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறேன். இந்தப் படத்தை பார்த்த பின்பு யாரும் என்னை பிரதமராக பார்க்க விரும்ப மாட்டார்கள்” என்று நடிகை கங்கனா ரனாவத் பிரதமராகும் ஆசையிருக்கிறதா என்ற கேள்விக்கு கிண்டலாக பதிலளித்தார்.

‘ரசாகர்: சைலண்ட் ஜெனோசைட் ஆஃப் ஹைதராபாத்’ ('Razakar: The Silent Genocide of Hyderabad) படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ட்ரெய்லரை வெளியிட்டார். அப்போது அவரிடம், “நாட்டின் பிரதமராக வேண்டும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?” என கேட்கப்பட்டது. உடனே சிரித்த கங்கா, “நான் ‘எமர்ஜென்சி’ என்ற படத்தை இயக்கி நடித்திருக்கிறேன். இந்தப் படத்தை பார்த்த பின்பு யாரும் என்னை பிரதமராக பார்க்க விரும்ப மாட்டார்கள்” என்று கிண்டலாக பதிலளித்தார்.

இந்தப் படத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பேசியிருந்த கங்கனா, “கிருஷ்ணரின் ஆசீர்வதித்தால் நிச்சயம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவேன்” என கூறியிருந்தார்.

எமர்ஜென்சி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. படத்துக்கு ரித்தேஷ் ஷா திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரி மாதமே முடிவடைந்தது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று படம் நவம்பர் 24-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை. படம் வரும் ஜூன் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE