ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பணம் மோசடியில் ஈடுபடும் நபர் மீது நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா கட்டமனேனி. இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்காரு வாரி பாட்டா’ மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இந்நிலையில், இவரது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு மர்ம நபர் ஒருவர் லிங்க்குகளை அனுப்பி அதன் மூலம் பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சித்தாரா கட்டமனேனியின் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடர்பான மாதப்பூர் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் இது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடையாளம் தெரியாத பயனர் சித்தாரா பெயரில் கணக்கை உருவாக்கி, பலருக்கும், வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான லிங்க்குகளை அனுப்பியுள்ளார். பொதுமக்கள் இது போன்ற லிங்குகளை நம்ப வேண்டாம். விழிப்புடன் இருந்து, போலி அக்கவுண்ட்டை ரிப்போர்ட் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நபரை கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் காவல் துறை ஈடுபட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பதிவில், சித்தாராவின் உண்மையான இன்ஸ்டாகிராம் ஐடியும் டேக் செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
» இலங்கையில் பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் குளறுபடி - பலர் காயம்
» “இது பாஜகவுக்கான பிரச்சாரப் படம் அல்ல!” - ‘ஆர்டிக்கிள் 370’ பட தயாரிப்பாளர்