“நாட்டின் உண்மையான பிரபலங்கள்” - ‘12த் ஃபெயில்’ பட நிஜ தம்பதிகளுடன் ஆனந்த் மஹிந்திரா சந்திப்பு 

By செய்திப்பிரிவு

மும்பை: ‘12த் ஃபெயில்’ படத்தின் உண்மையான தம்பதிகளை சந்தித்த மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, “இவர்கள்தான் இந்நாட்டின் உண்மையான பிரபலங்கள்” என பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நான் அவர்களிடம் ஆட்டோகிராஃப் கேட்டபோது அவர்கள் வெட்கப்பட்டனர். அந்த ஆட்டோகிராஃபை நான் பெருமையுடன் வைத்திருப்பேன். மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ், அவரது மனைவி ஷ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ், இருவரும் உண்மையான ஹீரோக்கள். இன்று அவர்களுடன் மதிய உணவருந்தினேன். ‘12த் ஃபெயில்’ படம் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவானது என்பதை தெரிந்துகொண்டேன்.

அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நேர்மையை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இவர்களை பின்பற்றினால் இந்தியா விரைவில் வல்லரசாகும். இவர்கள் தான் இந்த நாட்டின் உண்மையான பிரபலங்கள். அவர்களிடம் பெற்ற ஆட்டோகிராஃபை மதிப்பு மிக்கதாக கருதுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

12த் ஃபெயில்: விது வினோத் சோப்ரா இயக்கத்தில் விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர் நடிப்பில் வெளியான படம் ‘12த் ஃபெயில்’. கடந்த அக்டோபர் 27-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 12ம் வகுப்பில் தோல்வியடைந்து பின்னர் போராடி வெற்றி பெற்ற ஒருவர் எப்படி தனது விடாமுயற்சியால் ஐபிஎஸ் ஆகிறார் என்பது தான் கதை. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ஐஎம்டிபி ரேட்டிங் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE