நான்கு சுவர்கள் - கே.பாலசந்தர் இயக்கிய முதல் கலர் படம்!

By செய்திப்பிரிவு

வி.சாந்தாராம் இயக்கி, நடித்த ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ என்ற இந்திப் படத்தின் பாதிப்பில், கே.பாலசந்தர் இயக்கிய படம், ‘நான்கு சுவர்கள்’. அவர் எழுதி இயக்கிய முதல் கலர் படம் இது.

இதில் ஜெய்சங்கரும், ரவிச்சந்திரனும் கதாநாயகர்களாக நடித்தார்கள். நாகேஷ், வாணிஸ்ரீ, ஆர்.எஸ்.மனோகர், ஸ்ரீவித்யா, சவுகார் ஜானகி, விஜய நிர்மலா உட்பட பலர் நடித்தனர். திருடர்களான ரவிச்சந்திரனும் ஜெய்சங்கரும் ஒரு வீட்டுக்குத் திருடச் செல்லும் போது, அங்கிருக்கும் முதியவர் சாவியை எடுத்து இவர்களிடம் தருவார். அந்த முதியவர், தாங்கள் வளர்ந்த அனாதை விடுதியின் தலைவர் என்பது தெரியவருகிறது. அவர், நீங்கள் மனது வைத்தால் குற்றவாளிகளைத் திருத்த முடியும் என்று சொல்லிவிட்டு இறந்து விடுகிறார். இதையடுத்து குற்றவாளிகள் சிலரைத் தேடிப் பிடித்து, அந்த முதியவரின் நிலத்தில் வேலை செய்ய வைத்து திருத்துவது கதை.

இதில் ஸ்ரீவித்யா பார்வை குறைபாடுள்ளவராக நடித்தார். இதற்காக அவர் கான்டெக்ட் லென்ஸ் அணிந்து நடித்தார். அவருக்கு ஜோடி, நாகேஷ்.ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சார்பில் வி.எஸ்.சர்மா, பி.எஸ்.மணி தயாரித்த இந்தப் படத்துக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். ‘ஓ மைனா ஓ மைனா’ என்ற பாடல் இரண்டு முறை இடம்பெற்று ரசிக்க வைத்தது. எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் இடம் பெற்ற ‘நான் ஒரு பட்டுத் தோட்டம்’ பாடல் முதலில் ‘நான் ஒரு பள்ளிக்கூடம்’ என்று எழுதப்பட்டு இருந்தது. பின்னர் அது மாற்றப்பட்டது.

தனது வழக்கமான பாணியை விட்டுவிட்டு ஆக் ஷன், கிளாமர் என்று வேறு ஸ்டைலில் இயக்கி இருந்தார் பாலசந்தர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு கோவாவில் நடந்தது. ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணன் அருமையாகப் படமாக்கி இருந்தார், கடற்கரைக் காட்சிகளை. 1971-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE