திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை: எஸ்.ஏ.சந்திரசேகர் வருத்தம் @ ‘எழில் 25’

By செய்திப்பிரிவு

சென்னை: விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எழில்.இந்த படம் வெளியாகி 25 வருடங்கள்ஆகிறது. இதையடுத்து, ‘எழில் 25’ விழாவும் அவர், இப்போது விமல் நடிப்பில் இயக்கும் ‘தேசிங்கு ராஜா 2’படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவும் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது கூறியதாவது:

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் இயக்கிய காலகட்டத்தில் எழிலுடன் பழகி இருக்கிறேன். எப்போதும் ஒரே மாதிரி பழகும் மனிதர் அவர். என் மகன் விஜய், எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் ‘துள்ளாத மனமும் துள்ளும்’ அவர் வாழ்க்கையில் ஒரு மைல்கல். இப்போது திரைக்கதைக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. ஒரு ஹீரோ கிடைத்தால் போதும், எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணிவிடலாம். ஹீரோவுக்காக படம் ஓடி விடுவதால் பெரிய இயக்குநர் என நினைத்துக் கொள்கிறார்கள்.

இன்றைய இயக்குநர்களுக்கு விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம், தைரியம் இல்லை. அதேபோல, ஒரு கதை சொன்னதும் அந்தஇயக்குநரை எழுந்து நின்று கட்டிப்பிடித்தேன் என்றால், அது ஏ.ஆர் முருகதாஸ்தான். ஆனாலும் ‘துப்பாக்கி’ கதையைக் கேட்ட பிறகு அந்தப் படத்தில் ‘ஸ்லீப்பர் செல்’ குறித்து ஒரு கேள்வி கேட்டேன். அப்போது பதில் சொல்லாத அவர், என் கேள்விக்குப் படத்தில் பதிலளித்திருந்தார். அவருடைய பக்குவம் அது.

எழிலிடம் இதேபோன்று ஒரு கேள்வியை, ‘துள்ளாத மனமும் துள்ளும்’கதை சொன்ன போது, கேட்டேன். அந்தப் படத்தில் அதற்கான பதிலைச் சொன்னார். அந்தப் படம் வெள்ளி விழா கொண்டாடியது. அப்போது என்ன விஜய் பெரிய சூப்பர் ஸ்டாரா?இல்லையே. அந்தக் கதை அவரை தூக்கிச்சென்றது. அந்தப் படத்தில் யார் நடித்திருந்தாலும் அது சில்வர் ஜூப்ளி கண்டிருக்கும். காரணம் திரைக்கதை. இன்றைய இளைஞர்கள் ஹீரோக்களை பின்தொடர்கிறார்கள். அதனால் ஒருபடத்தில் மூன்று நிமிடமாவது நல்ல விஷயங்களைச் சொல்லுங்கள். இவ்வாறு எஸ்.ஏ.சந்திர சேகர் பேசினார்.

விழாவில், விக்ரமன், பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், சரண், உதயகுமார், சுசீந்திரன், நடிகர்கள்ஜெயம் ரவி, ராதாரவி, இசைஅமைப்பாளர் வித்யா சாகர்உட்பட பலர் பங்கேற்றனர்.

விழா ஏற்பாடுகளை ‘தேசிங்குராஜா 2’ படத்தைத் தயாரிக்கும் இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் பி.ரவிசந்திரன் செய்திருந்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE