‘ஈடு செய்ய முடியாத பேரிழப்பு’ - பவதாரிணிக்கு ஓபிஎஸ் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா, எம்.பி. அவர்களின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி ராஜா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரணி அவர்கள். வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரணி அவர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

பவதாரணியை இழந்து வாடும் அவரது தந்தை இளையராஜா அவர்களுக்கும், அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE