“மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தை அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” - அமைச்சர் உதயநிதி ட்வீட்

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அவரது ட்வீட்டில் தெரிவித்துள்ளது என்ன என்பதை பார்ப்போம்.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக இந்தப் படம் வெளிவந்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். கன்னட சினிமா நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொங்கல் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

“ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து ‘கேப்டன் மில்லர்’ என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ் குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ்குமார், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா அருள் மோகன், சண்டை பயிற்சியாளர் திலீப் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்” என அமைச்சர் உதயநிதி எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE