‘லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்’ - உயர் நீதிமன்றத்தில் வழக்கு

By கி.மகாராஜன் 


மதுரை: நடிகர் விஜய் நடத்த லியோ படத்தில் அதிகளவில் வன்முறையை தூண்டும் காட்சிகளை வைத்ததற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, நடிகர் விஜய் நடித்த ‘லியோ’ படம் கடந்தாண்டு அக்.19-ல் வெளியானது. இப்படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது. துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளுடன் வன்முறையில் ஈடுபடுவது, வீட்டில் துப்பாக்கி தயாரிப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

மதங்கள் தொடர்பான முரண்பாடான கருத்துக்கள், எதிரிகளை பழிவாங்குவது, பெண்கள், குழந்தைகளை கொலை செய்வது, போதைப் பொருள் பயன்படுத்துவது, மனிதர்களை துன்புறுத்துவது உள்ளிட்ட பல்வேறு பார்க்க தகாத காட்சிகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளது.

சமூகத்தை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் போலீஸார் உதவியுடன் அனைத்து குற்றங்களையும் செய்யலாம் என்பது போன்ற காட்சிகளு்ம் உள்ளது. இந்த வன்முறை காட்சிகளை பார்க்கும் இளம் சிறார்கள் தவறான பாதைக்கு செல்ல வாய்ப்புள்ளது.

லியோ படத்தில் பொழுதுபோக்கு அம்சம் இல்லை. இதுபோன்ற திரைப்படங்களை தணிக்கை துறை முறையாக ஆய்வு செய்ய வேண்டும். லியோ படத்தில் வன்முறையை தூண்டும் காட்சிகளை வைத்தற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும். லியோ படத்துக்கு தடை விதித்தும், இயக்குநர் மீது குற்ற வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார். ஆர்.விஜயகுமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. பி்ன்னர் இந்த விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE