உடுக்கை, தவில் அதிர தனுஷுடன் சிவராஜ் குமார் நடனம்... ‘கேப்டன் மில்லர்’ 3-வது சிங்கிள் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் மூன்றாவது சிங்கிளான ‘கோரனாறு’ பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

சிங்கிள் எப்படி? - ‘கோரனாறு’ என தொடங்கும் இப்பாடலை உமா தேவி எழுதியுள்ளார். ‘தேனிசைத் தென்றல்’ தேவா, சந்தோஷ் ஹரிஹரன், அலெக்சாண்டர் பாபு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். உடுக்கை, தவில் உள்ளிட்ட வாத்தியங்கள் வழியே ஃபாஸ் பீட் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது.

‘கொள்ளையாடும் கூட்டத்த, கொல்லும் பகை கூட்டத்த குடல உருவி மாலைய போட்டு காவ காத்து நின்னாரு’ போன்ற வரிகள் கவனம் பெறுகின்றன. பாடலில் தனுஷும், சிவராஜ் குமாரும் இணைந்து நடனமாடும் இடம், அதற்கான பாபா பாஸ்கரின் நடன அமைப்புகள் ரசிக்க வைக்கின்றன. படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. - பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE