வெற்றிகளைக் குவித்த விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி!

By குமார் துரைக்கண்ணு

விஜயகாந்தின் சிறுவயது முதலே அவருடன் நெருங்கிய நண்பராக இருந்தவர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர். தனது திரைப்பயணத்தில், இப்ராஹிம் ராவுத்தரைத்தான் விஜயகாந்த் அதிகமாக நம்பினார். தான் நடிக்க வேண்டிய படங்கள், கதைகளை தேர்வு செய்வதில் துவங்கி தான் நடிக்கும் படங்களை தயாரிப்பது வரை, அனைத்தையும் இறுதி செய்யும் அதிகாரத்தை இப்ராஹிம் ராவுத்தருக்குத்தான் விஜயகாந்த் வழங்கியிருந்தார்.

திரைப்படத் தயாரிப்பாளரான இப்ராஹிம் ராவுத்தர், ராவுத்தர் பிலிம்ஸ், தமிழ் அன்னை சினி கிரியேசன்ஸ் மற்றும் ஐ.வி. சினி புரொடெக்சன்ஸ் என்ற பேனர்களில் பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். இந்த பேனர்களில் விஜயகாந்த் நடிப்பில் ஏராளமான வெற்றி திரைப்படங்களும் வெளியாகின. இயக்குநர் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் வெளிவந்த உழவன் மகன் திரைப்படம்தான், ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படம். 1987-ல் வெளியான இந்த திரைப்படம், அந்த வருடம் தீபாவளி ரிலீஸான ரஜினியின் மனிதன், கமல்ஹாசனின் நாயகன் திரைப்படங்களுடன் போட்டியிட்டு, வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 1992-ல் பரதன் மற்றும் தாய்மொழி,1993-ல் ராஜதுரை, 1995-ல் கருப்பு நிலா,1998-ல் தர்மா ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. மொத்தமாக ராவுத்தர் பிலிம்ஸ் பேனரில் விஜயகாந்த் 6 திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இப்ராஹிம் ராவுத்தரின் மற்றொரு தயாரிப்பு நிறுவனமான தமிழன்னை சினி கிரியேசன்ஸ் பேனரில் விஜயகாந்த் நடிப்பில் முதலில் வெளியான திரைப்படம் பூந்தோட்ட காவல்காரன். 1988ம் ஆண்டு வெளியான இப்படம் வெள்ளிவிழா கண்டது. தொடர்ந்து 1989-ம் ஆண்டு பாட்டுக்கு ஒரு தலைவன், 1994-ம் என் ஆசை மச்சான், 95ம் ஆண்டு காந்தி பிறந்த மண், 2000-ம் ஆண்டு சிம்மாசனம் ஆகிய திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்தார். தமிழன்னை சினி கிரியேசன்ஸ் தயாரித்த 5 திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்து கொடுத்திருந்தார்.

இப்ராஹிம் ராவுத்தரின் ஐ.வி.சினி புரொடக்சன்ஸ் பேனரில் வந்த திரைப்படங்கள் அனைத்துமே விஜயகாந்த்துக்கு மிக சிறப்பான படங்களாகவே அமைந்தன. வசூல் ரீதியாக மட்டுமின்றி, மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுத் தந்த படங்களாக அவை அமைந்திருந்தன. இந்த பேனரில் வந்த படம்தான் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி அறிமுகமான புலன் விசாரணை திரைப்படம். 1990-ல் வந்த இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

இதனையடுத்து 1991-ல் விஜயகாந்தின் நூறாவது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் வெளிவந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றதுடன், நடிகர்களின் நூறாவது படம் சரியாக ஓடாது என்ற நம்பிக்கையை தகர்த்தெறிந்தது. இதனைத்தொடர்ந்து 1993-ல் சக்கரைத் தேவன், 1998-ல் உளவுத்துறை என ஆகிய படங்களில் ஐ.வி.சினி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் திரைப்படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தார்.

விஜயகாந்த் நாயகனாக இல்லாத படங்களையும் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்து இருந்தார். 90-களின் பிற்பகுதியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் இருந்தார். பின்னர், கருத்து வேறுபாட்டின் காரணமாக இப்ராஹிம் ராவுத்தர் விஜயகாந்துடன் பிரிந்து சென்றுவிட்டார். 2015ம் ஆண்டு மறைவதற்கு முன்பாக, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இப்ராஹிம் ராவுத்தரை விஜயகாந்த் அடிக்கடி சென்று சந்தித்து வந்தார். சுயநினைவு இழந்து இப்ராஹிம் ராவுத்தர் மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்த நிலையில் அவருக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான நட்பு குறித்த கடிதம் ஒன்றை விஜயகாந்த் எழுதியிருந்தார்.

அக்கடித்ததில் "நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.உன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றன.

காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று எழுதியிருந்தார் விஜயகாந்த்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE