“அண்ணே.. என்னை மன்னிச்சிடுங்க” - விஜயகாந்த்துக்கு விஷால் கண்ணீர் மல்க இரங்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விஷால் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து காணொலி வெளியிட்டுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஷால் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், அவர் கூறியிருப்பதாவது: கேப்டன் விஜயகாந்த் இறந்துவிட்டார் என்று கேள்விப்பட்டேன். அண்ணே.. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் முகத்தை ஒருமுறை பார்த்து உங்கள் காலை தொட்டுக் கும்பிட்டிருக்க வேண்டும். நல்லது செய்வது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதிலும் எங்களைப் போன்ற ஆட்கள் நல்லது செய்வது சாதாரணம் அல்ல. உங்களிடமிருந்து அதை நான் கற்றுக் கொண்டேன். உங்கள் அலுவலகத்துக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு சோறு போட்டு அனுப்புவீர்கள்.

ஒரு அரசியல்வாதி, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகியோ என்பதை விட ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு மனிதராக பேர் வாங்குவது சுலபம் அல்ல. சிலருக்கு மட்டுமே அந்த பேர் நீடிக்கும். என்னை மன்னித்துவிடுங்கள் அண்ணே. சத்தியமாக சொல்கிறேன். நான் உங்களுடன் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” இவ்வாறு அந்த காணொலியில் விஷால் கண்ணீருடன் பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE