மும்பை: புகழ்பெற்ற இந்துஸ்தானி கிளாசிகல் பாடகர் உஸ்தாத் ரஷீத் கானின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால் அவர் விரைவில் மீண்டு வர ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.
இந்திய கிளாசிக்கல் மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் புகழ்பெற்ற இசைக் கலைஞராக அறியப்படுவர் உஸ்தாத் ரஷீத் கான். இவர் புகழ்பெற்ற பாடகர் இனாயத் ஹுசைன் கானின் பேரன் ஆவார். உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத் கான், இந்திய கிளாசிக், இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பல்வேறு ஆல்பம் பாடல்களை உருவாக்கியுள்ளார். மேலும் ஏராளமான இந்தி திரைப்பட பாடல்களையும் பாடியுள்ளார். மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக புற்றுநோய் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர், கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதனிடையே ரஷீத் கானின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் தொடர்ந்து தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரஷீத் கான் விரைவில் மீண்டு வர அவரது ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.