‘பராசக்தி’ சூப்பர் ஹிட்டாகி சிவாஜி கணேசன் என்ற மகாநடிகன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பிறகு அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்தன. அவர் முதலில் ஒப்பந்தமான ‘பூங்கோதை’ நான்காவது படமாக வெளியான நிலையில் அவரது இரண்டாவது படமாக வெளிவந்தது ‘பணம்’.
பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தயாரான படங்கள். என்றாலும் அது முந்திக்கொண்டது. பராசக்தி கொஞ்சம் தாமதமாகியிருந்தால், சிவாஜியின் முதல் படமாக ‘பணம்’ஆகியிருக்கும். இந்தப் படத்தைத் தனது மதராஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்தவர் ஏ.எல்.சீனிவாசன். அவருடைய முதல் தயாரிப்பு இது. என்.வி.பாபுவின் மூலக் கதைக்குத் திரைக்கதை, வசனம் எழுதியவர் கருணாநிதி. என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில், ஒரே ஒரு பாரதிதாசன் பாடலைத் தவிர மற்றப் பாடல்களை ஏ.எல்.சீனிவாசனின் சகோதரர் கண்ணதாசன் எழுதினார்.
சிவாஜி கணேசன், பத்மினி ஜோடியாக நடித்தனர். இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது. பிறகு சுமார் 60 படங்களுக்கு மேல் அவர்கள் ஜோடியாக நடித்தனர். சிவாஜியும் என்.எஸ்.கிருஷ்ணனும் இணைந்து பணியாற்றிய முதல் படமும் இதுதான். இந்தப் படத்தின் டைட்டிலில் முதலில் தயாரிப்பு, டெக்ன்ஷியன்கள் பெயர் போட்ட பிறகு நடிகைகள் பெயர் வரும். அடுத்துதான் நடிகர்கள் பெயர்கள்.
சிவாஜி, பத்மினியுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.கே.ராமச்சந்திரன், வி.கே.ராமசாமி, சி.எஸ்.பாண்டியன், பி.ஆர்.பந்துலு, டி.ஏ.மதுரம், தங்கவேலு உட்பட பலர் நடித்தனர். அப்போது வளர்ந்து வரும் இசை அமைப்பாளர்களாக இருந்த விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை அமைத்தனர். இருவரும் முதன் முதலில் சேர்ந்து இசை அமைத்த திரைப்படமும் இதுதான்.
இந்தப் படத்தில் திமுக பற்றி ஒரு பாடல் வரவேண்டும் என்று நினைத்தது படக்குழு. ஆனால், தணிக்கைக்குழு அனுமதிக்காது என்பதால் திமுக என்று வருமாறு, ‘தினா முனா கனா’ என்ற பாடலை எழுதினார் கண்ணதாசன். அதாவது ‘திருக்குறள் முன்னணி கழகம்’ என்ற இந்தப் பாடலில்,‘பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தார் பெரியார்- வள்ளுவப் பெரியார்’ என்பது உட்பட திமுகவின் கருத்துகளைப் பேசியது இந்தப் பாடல்.
என்.எஸ்.கிருஷ்ணன் குரலில் வந்த இந்தப் பாடல், வரவேற்பைப் பெற்றது. அவர் பாடிய மற்றொரு பாடலான, ‘எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்’ பாடலும் அப்போது சூப்பர் ஹிட். கையில் பணம் இல்லாத ஒருவர் பாடும் இந்தப் பாடலில், கண்ணதாசன் எழுதிய வரிகள் இப்போதும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றன. இந்தப் படத்திலும் கருணாநிதியின் வசனம் பேசப்பட்டது. 1952-ம் ஆண்டு இதே தேதியில் வெளியானது ‘பணம்’.