சென்னை: “செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம் புதிய படம் ஒன்றில் நடிக்க இருந்தார். ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் ரத்தானது” என இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “மயக்கம் என்ன படத்தில் வரும் ‘நான் சொன்னதும் மழை வந்துச்சா’ பாடல் முதலில் வேறொரு படத்துக்காக இசையமைக்கப்பட்டது. செல்வராகவன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருந்த அந்தப் படத்துக்கு ‘சிந்துபாத்’ என பெயரிடப்பட்டிருந்தது. ஆனால் அந்தப் படம் ட்ராப் ஆகிவிட்டது. அதனால் தான், அந்த ட்யூனை ‘மயக்கம் என்ன’ படத்தில் பயன்படுத்தினேன்.
மேலும் ‘மயக்கம் என்ன’ வரும் ‘ஓட ஓட தூரம் குறையல’ பாடல் அரைமணி நேரத்தில் உருவான பாடல். பெரும்பாலும் செல்வராகவன் படத்தில் நான் இசையமைத்த பாடல்கள் மிக விரைவாக உருவாக்கப்பட்டவை” என தெரிவித்தார். ஜி.வி.பிரகாஷ் இசையில் அடுத்து ‘கேப்டன் மில்லர்’, ‘தங்கலான்’, ‘எஸ்கே21’, ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.