எஸ்.ஜே.சூர்யாவின் 'அன்பே ஆருயிரே' படம் மூலம் நிலா என்ற பெயரில் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா சோப்ரா. தொடர்ந்து, ஜாம்பவான், லீ, மருதமலை, காளை உட்பட சில படங்களில் நடித்த அவர், மீரா சோப்ரா என்ற தனது உண்மையான பெயரில் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினரான இவர், தனது சினிமா வாழ்க்கையில் முன்னேற பிரியங்கா சோப்ராவின் பெயரை ஒரு போதும் பயன்படுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “இந்தி சினிமா துறையில் கடந்த 9 வருடங்களாக இருக்கிறேன். ஆனால் எண்ணி நான்கு படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன். எனக்கு இன்னும் பல கதாபாத்திரங்கள் கிடைக்க வேண்டும். நான் நடித்த ‘சாஃபத்’ படத்தில் என்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காண்பித்தேன். அதுபோன்ற கதைகள் எனக்குக் கிடைக்க வேண்டும். எனது உறவினர்கள் பிரியங்கா சோப்ரா, பரினீதி சோப்ரா பற்றிக் கேட்கிறார்கள்.
தொழில்ரீதியாக எங்களின் குடும்ப தொடர்பை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். அது நான் எடுத்த முடிவு. அதற்காக, ‘இவர் என் சகோதரி, இவருக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று யாரும் சொல்வதில்லை. அப்படி ஏதும் நடக்கவில்லை என்றாலும் அதை நான் விரும்பவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.