வருடும் மொலோடி... தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ 2-வது சிங்கிள் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘உன் ஒளியிலே’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. ‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடித்துள்ளார்.

சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ பாடல் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பாடல் எப்படி? - ஷான் ரோல்டன் பாடியுள்ள இப்பாடலை கேபர் வாசுகி எழுதியுள்ளார். காதல் மெலோடியான இப்பாடலின் தொடக்கத்தில், ‘விதி சிரிக்குதா அழுகுதா தெரியல...’ என ஜி.வி.பிரகாஷ் குரல் ஒலிக்கிறது. தொடர்ந்து வரும் ‘உன் ஒளியிலே என் நிழல் விரியுதே... உன் வெளிச்சத்தில் என் இருள் புரியுதே’ என்ற ஷான் ரோல்டன் குரல் இதம் சேர்க்கிறது. பிரிவின் வலியைச் சொல்லும் பாடலின் வரிகள் கவனம் பெறுகின்றன. குறிப்பாக, “ஆறாத காயங்கள் கரம் பூட்டுதே... போகாத தூரங்கள் எனை ஈர்க்குதே” போன்ற வரிகளுடன் ஷானின் மென்சோக வாய்ஸூம் இணையும் இடங்கள் ஈர்க்கின்றன. பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE