பெண்களுக்கு பாதுகாப்பில்லை: பாக். நடிகை பரபரப்பு புகார்

By செய்திப்பிரிவு

கராச்சி: பாகிஸ்தானின் பிரபலமான நடிகை ஆயிஷாஓமர். அங்கு அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையான இவர், பாகிஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சுதந்திரமும் பாதுகாப்பும் மனிதனின் அடிப்படை தேவை. அது இங்கு இல்லை. நான் சாலையில் நடக்க விரும்புகிறேன். ஏனென்றால் ஒவ்வொருவரும் சுத்தமான காற்றுக்காக வெளியில் செல்ல வேண்டும். நான் சைக்கிள் ஓட்ட விரும்புகிறேன். ஆனால் அதை என்னால் செய்ய முடியாது. கரோனா காலகட்டத்தில் மட்டுமே பெண்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடிந்தது. கராச்சியில் நான் மன அழுத்தத்தையும் கவலையையும் உணர்கிறேன். நான் பாதுகாப்பாக உணரவில்லை. இந்த நாட்டில் ஒரு பெண் எதிர்கொள்ளும் பயத்தை எவ்வளவு கடினமாக முயன்றாலும் ஆண்களால் புரிந்துகொள்ளவே முடியாது. கடத்தப்படுவோமோ, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிவிடுமோ, வழிப்பறி செய்துவிடுவார்களோ என்ற பயமில்லாமல் என்னால் பாகிஸ்தானில் நடக்க முடியாது. வீட்டில் கூட பாதுகாப்பில்லை. நான் நாட்டை நேசிக்கிறேன். உலகில் எங்கு வாழ விருப்பம் என்றால், நான் பாகிஸ்தானைதான் தேர்வு செய்வேன். ஆனால், என் சகோதரர் டென்மார்க் சென்றுவிட்டார். என் தாயும் நாட்டை விட்டு வெளியேற இருக்கிறார்.

இவ்வாறு ஆயிஷா ஓமர் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE