ஹைதராபாத்: பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாவதையடுத்து டிக்கெட் வாங்க ரசிகர்கள் முண்டியடித்து வருகின்றனர். ஹைதராபாத்தில் ஒரு திரையரங்கில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.22) தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
’பாகுபலி’ வெற்றிக்குப் பிறகு பிரபாஸுக்கு எந்தப் படமும் வெற்றியடையவில்லை. இதனால் ‘சலார்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இப்படத்தின் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவின் பல்வேறு திரையரங்குகளில் பிரபாஸ் ரசிகர்கள் நீண்ட வரிசைகளில் நின்று ‘சலார்’ முதல்காட்சிக்கான டிக்கெட்களை பெற்றுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், ஹைதராபாத் அருகே உள்ள குக்கட்பள்ளி என்ற பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் அங்கு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். இருப்பினும், கூட்டத்தில் சிலர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.