அரசுப் பள்ளியை தத்தெடுத்தார் ரிஷப் ஷெட்டி

By செய்திப்பிரிவு

‘காந்தாரா’ படம் மூலம் பிரபலமானவர் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி. ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதன் முதல் பாகம் ‘காந்தாரா சாப்டர் 1’ என்ற பெயரில் இப்போது உருவாகிறது. இதன் பூஜை, உடுப்பி மாவட்டம் கும்பாசியில் உள்ள ஆனேகுட்டே விநாயகர் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் ரிஷப் ஷெட்டி, கர்நாடக மாநிலம் உடுப்பி அருகிலுள்ள தனது சொந்த கிராமமான கீரடியில் உள்ள அரசு பள்ளியைத் தத்தெடுத்துள்ளார். தனது அறக்கட்டளை சார்பில் இந்தப் பள்ளிக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE