“3 ஆண்டுகளாக நிறைய கஷ்டங்கள்...” - ‘ஃபைட் கிளப்’ குறித்து விஜய்குமார் உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “2020-ல் படத்தை தொடங்கினோம். 3 வருடமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டோம். இந்த டைட்டிலின் புகழுக்கு களங்கம் விளைவிக்க மாட்டோம் என நம்புகிறோம்” என்று ‘ஃபைட் கிளப்’ பட நிகழ்வில் நடிகர் விஜய்குமார் உருக்கமான பேசினார்.

‘உறியடி’ புகழ் விஜய்குமார் நடிப்பில் புதிதாக வெளியாக உள்ள படம் ‘ஃபைட் கிளப்’ (Fight Club). இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்குகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் விஜய்குமார் “இந்தப் படத்துக்கு அழுத்தமான டைட்டில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம். இது டேவிட் ஃபின்சரின் கல்ட் க்ளாஸிக் படத்தின் டைட்டில். அந்தப் படத்தின் கதையும் இந்தப் படத்தின் கதையும் வேறு. அந்தப் பெயரை நாம் கெடுத்துவிட மாட்டோம் என நினைத்து நம்பிக்கையாக இந்த டைட்டில் வைத்தோம்.

2020-ல் படத்தை தொடங்கினோம். 3 வருடமாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டோம். இயக்குநர் அப்பாஸ் கடுமையாக உழைத்தார். நல்ல படம் அதற்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும். அதன்படி நிறைய சிரமங்களுக்குப் பிறகு படத்தை பார்த்த போது, அவுட்புட் நன்றாக வந்துள்ளது. லோகேஷ் கனகராஜூக்கு படத்தை போட்டுக்காட்டி இப்போது இங்கே வந்து நிற்கிறோம்.

இந்தப் படத்தின் பயணம் மிக நெடியது. இந்தப் படத்தை நாங்கள் வியாபாரமாக பார்க்கவில்லை. பர்சனலாக பார்த்தோம். அதனால்தான் இப்படியான ஒரு மேடையில் வந்து நிற்கும்போது எமோஷனலாகிவிட்டேன். மக்களுக்கு இப்படம் பிடிக்கும் என நினைக்கிறேன். நிறைய இளம் தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். என்னுடைய உதவி இயக்குநர் அப்பாஸ்தான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். அவருக்கு சினிமாதான் எல்லாம். படம் மக்களுக்கு பிடிக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE