மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரிய வழக்கை தீர்ப்புக்காக ஒத்திவைத்தது நீதிமன்றம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மன்சூர் அலிகானுக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மன்சூர் அலிகான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே அவ்வாறு பேசவில்லை. இது தொடர்பாக நடிகை த்ரிஷா சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாத நிலையில் தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் வழக்கு பதிவு செயப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அப்போது காவல் துறை தரப்பில் மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, “மன்சூர் அலிகானின் பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார். இதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE