கேரளா: பொருளாதார நெருக்கடியால் தனது பள்ளி படிப்பை நான்காம் வகுப்பிலேயே நிறுத்திய புகழ்பெற்ற மலையாள நடிகர் இந்திரன்ஸ், தனது 67-வது வயதில் 10-ஆம் வகுப்பு தேர்வுக்கு தயாராகி வருகிறார்.
மலையாள நடிகர் இந்திரன்ஸ் பொருளாதார நெருக்கடியால் தனது பள்ளி படிப்பை நான்காம் வகுப்பின் பாதியில் நிறுத்தி விட்டார். இதையடுத்து 1981 ஆம் ஆண்டு துணி கடையில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து (costume designer) கொடுக்கும் வேலையை செய்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய திறமைகளை கண்டறிந்து, நடிகராகத் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். 40 வருடங்களுக்கு மேலாகத் திரைத் துறையில் நடிகராக வலம் வருகிறார். 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மாநில அரசின் பல்வேறு விருதுகள், தேசிய விருது ஆகியவற்றை வென்றுள்ளார்.
தற்போது தனது வீட்டுக்கு அருகிலுள்ள அரசுப் பள்ளியில் வார இறுதி வகுப்புகளுக்குச் சென்று பத்தாம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வருகிறார். அடுத்த ஆண்டு தேர்வும் எழுத விருக்கிறார். கல்வியின் அவசியம் குறித்து பேசிய அவர், “படிப்பறிவு இல்லாதது கண் பார்வை இல்லாததற்குச் சமம். கல்வியின் கண்ணோட்டத்தில் உலகைப் பார்க்க வேண்டும்” என்று தனது ஆசையை வெளிப்படுத்தினார். புள்ளி, நுனா, நடிகர் திலகம் ஆகிய பல படங்களில் இந்திரன்ஸ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்விக்கு வறுமையோ, வயதோ தடையல்ல. கற்று கொள்ளும் ஆர்வமும், சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்தாலே போதும் என்பதாக அவரது செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.