சென்னை: சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து திரைத்துறைக்கு வந்தவர், ஜேம்ஸ் வசந்தன் . இவர் சசிகுமார் இயக்கி நடித்த ‘சுப்பிரமணியபுரம்’, பாண்டிராஜ் இயக்கிய 'பசங்க', ‘நாணயம்’ உட்பட சில படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ‘ஓ அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கியும் இருந்தார். இவர் இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
கலைஞர் தொலைக்காட்சியில் 'தமிழோடு விளையாடு' என்ற புதிய நிகழ்ச்சி வரும் 26-ம் தேதி முதல் ஞாயிறு தோறும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கேற்க இருக்கின்றனர்.
முழுவதும் தமிழில், தமிழை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பான வித்தியாசமான சுற்றுகள், அறிவை வளர்க்கும் கேள்விகள் என உணர்ச்சிப் பூர்வமாக உருவாகி இருக்கிறது என்று கலைஞர் தொலைக்காட்சித் தெரிவித்துள்ளது