துருவ நட்சத்திரம் தொடர்ச்சியான பாகங்களை கொண்ட படம்! - கவுதம் வாசுதேவ் மேனன் தகவல்

By செய்திப்பிரிவு

வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, ராதிகா, பார்த்திபன், விநாயகன், சிம்ரன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘துருவ நட்சத்திரம்’. இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படம் பற்றி கவுதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது:

இது ஸ்பை த்ரில்லர் படம். சூர்யாவுக்காக நான் உருவாக்கிய கதை இது. அவர் சில காரணங்களால் நடிக்கவில்லை. பிறகு ரஜினிகாந்திடம் இந்தக் கதையைச் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அவரால் இதில் நடிக்க முடியவில்லை. விக்ரம் இந்தக் கதைக்குள் வந்ததும் சில மாற்றங்கள் செய்தேன். சூர்யாவுக்காக நான் பண்ணிய கதையில் உணர்வுப்பூர்வமான பிளாஷ்பேக் இருந்தது. 20 வயது பையனின் விஷயம் அது. அதை இதில் நீக்கிவிட்டேன்.

மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவம் நடந்து இப்போது 15 வருடம் ஆகிவிட்டது. 15 வது வருடத்தில் நடக்கும் கதையாக இதை உருவாக்கி இருக்கிறேன். இது தொடர்ச்சியான பாகங்களைக் கொண்ட படம். முதல் பாகமான இந்தப் படத்தின் முடிவில் ட்விஸ்ட் இருக்கும். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வரும். அதில் வேறு ஒரு வில்லன் வருவார், வேறு ஒரு ஹீரோ கூட வரலாம். படம் வெற்றிபெற்றாலும் இல்லை என்றாலும் இந்தக் கதையைத் தொடர்ச்சியாகப் பண்ண இருக்கிறேன்.

படத்தில் விக்ரம் பெயர் துருவ். துருவ நட்சத்திரம் என்றால் அதை ஸ்பெஷல் ஸ்டார் என்று சொல்வோம். விக்ரம் பின்னணியில் கதை நடப்பதால் துருவ நட்சத்திரம் என்று தலைப்பு வைத்திருக்கிறேன். நான் படங்களில் நடிப்பது பற்றிக் கேட்கிறார்கள். ஒரு பிரச்சினை காரணமாக மற்ற இயக்குநர்கள் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். ஆனால், அதிகமான வாய்ப்புகள் வந்தன. இப்போது கூட ஒரு பெரிய ஹீரோ படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், என் வீட்டில், நான் நடிகனாக வெளியில் செல்வதை விரும்பவில்லை. நீ இதற்காக வரவில்லை என்பதைச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் படங்களில் நடித்ததை கற்றலாகத்தான் பார்த்தேன்.

இதன் படப்பிடிப்பு இஸ்தான்புல், பல்கேரியா, ஜார்ஜியா, நியூயார்க், துருக்கி, அபுதாபி உட்பட பல்வேறு பகுதிகளில் நடந்திருக்கிறது. டெக்னிக்கலாக இந்தப் படம் அருமையாக இருக்கும். இவ்வாறு கவுதம் வாசுதேவ் மேனன் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE