“நான் சலசலப்புக்கு அஞ்சுறவனா?” - த்ரிஷா குறித்த பேச்சில் மன்சூர் அலிகான் அலட்சிய விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து மிகவும் அருவருத்தக்க வகையில் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மன்சூர் அலிகானின் இந்த பேச்சு குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள த்ரிஷா, இவரை போன்றவர்களால் தான் மனித குலத்துக்கே அவப்பெயர் என்றும், இனி தனது திரை வாழ்க்கையில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். த்ரிஷாவைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், தனது பேச்சு குறித்து நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 'அய்யா' பெரியோர்களே. திடீர்னு த்ரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு, பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல, நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடுறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவி விட்டுருக்கானுக. உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லிருப்பேன். அனுமாரு சிரஞ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க.

பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்லன்னு ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சறவனா? த்ரிஷாக்கிட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா, என்கூட நடிச்சவங்கள்ளாம் எம்எல்ஏ, எம்.பி, மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள் பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க.

மேலும், ‘லியோ’ பூஜையிலேயே என் பொண்ணு தில்ரூபா உங்களோட பெரிய ரசிகைன்னு த்ரிஷாக்கிட்ட சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறவன் என எல்லாருக்கும் தெரியும். த்ரிஷாக்கிட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனயோ பிரச்சின இருக்கு... பொழப்ப பாருங்கப்பா” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு எதிர்ப்புகளுக்குப் பிறகும் மன்சூர் அலிகான் தன்னுடைய அறிக்கையில் தனது பேச்சு குறித்து சிறிதும் வருந்தியதாகவோ தனது தவறை உணர்ந்ததாகவோ தெரியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE