தந்தையின் நினைவு தினம்: 40 மாணவர்களுக்கு கல்வி உதவி அறிவித்த மகேஷ்பாபு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ள நடிகர் மகேஷ்பாபு 40 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் மூத்த நடிகர் கிருஷ்ணா (79), உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி காலமானார். 350-க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளர், இயக்குநராகவும் இருந்துள்ளார். அவருக்கு 2009-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அவரது முதலாமாண்டு நினைவு தினம் நேற்று (நவ.15) அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், தனது தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடிகர் மகேஷ் பாபு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையை தொடங்கியுள்ளார். இதன் மூலம் பள்ளி தொடங்கி முதுகலைப்பட்டம் வரை பயிலும் பின்தங்கிய வசதியில்லாத 40 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மகேஷ்பாபுவின் இந்த முன்னெடுப்பு அவரது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக, நடிகர் மகேஷ்பாபவும் அவரது மனைவியும் இணைந்து 2020-ம் ஆண்டு ‘மகேஷ்பாபு அறக்கட்டளை’யைத் தொடங்கி அதன் மூலம் இதய நோய் பாதிப்புகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ நிதி உதவியை அளித்து வருகின்றனர். இதுவரை இந்த அறக்கட்டளையின் மூலம் 10 வயதுக்குட்பட்ட 2500 குழந்தைகளுக்கான மருத்துவ நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனது மகன் கவுதம் பிறந்த போது அவருக்கு இதயம் தொடர்பான பிரச்சினை இருந்ததால் மகேஷ்பாபு இந்த உதவியை முன்னெடுப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE