ஹைதராபாத்: பிரசாந்த் நீல் ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் இந்தப் படம் செப். 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் படத்தின் பணிகள் முடிவடையாததால், டிச.22 ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர்.
அதே தேதியில் ஷாருக்கான் நடித்துள்ள ‘டங்கி’ படம் வெளியாக இருக்கிறது. ஷாருக்கான் நடிப்பில் வெளியான, பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலைப் பெற்றிருப்பதால் , ‘டங்கி’ படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நாளில் ‘சலார்’ வெளியானால், வசூல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ‘சலார்’ ரிலீஸ்அடுத்த வருடத்துக்குச் செல்லும்என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை