“எவ்வளவு உயரே பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதான் ஆகணும்” - ‘லியோ’ வெற்றி விழாவில் ரத்னகுமார் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: “விஜய் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லோரையும் சமமாகவே தான் பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்துதானே ஆக வேண்டும்” என்று ரத்னகுமார் பேசியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் விஜய்யின் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவில் பேசிய படத்தின் எழுத்தாளர் ரத்னகுமார், “நான் சினிமாவுக்கு வர முக்கியமான காரணம் விஜய்தான். நான் சிறுவயதிலிருந்தே விஜய் ரசிகன். தொடக்கத்தில், விஜய்யின் புகைப்படத்தை யார் பார்ப்பார்கள் என்று பத்திரிகைகள் எழுதி வந்தன.. ஆனால், தற்போது ஒரு புகைப்படத்தை காட்டியதும் திரையரங்கமே அதிருகிறது. ‘மாஸ்டர்’ படத்தில் ‘வாத்தி’ ரெய்டு பாடலை அந்தச் சூழலுக்கு தகுந்தாற்போல எழுதியிருந்தோம். ஆனால், அதன் பின்னர் நாங்கள் படப்பிடிப்பு நடத்திகொண்டிருந்த நெய்வேலியில் உண்மையாகவே ரெய்டு வந்துவிட்டனர்.

லியோவில் ‘நான் ரெடி தான் வரவா’ பாடலை கதைக்களத்துக்காக எழுதியிருந்தோம். ஆனால், இப்போது அந்தப் பாடலை என்னவாக மாறியிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். நான் விஜய்யுடன் இரண்டு படங்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எப்போதும் நிற்க வைத்து யாருடனும் பேசமாட்டார். நாம் பேசப்போனாலே அமர வைத்து தான் பேசுவார். அவர் யாரையும் உயர்வானவராகவோ, தாழ்வானவராகவோ பார்க்க மாட்டார். எல்லோரையும் சமமானவராகவே பார்ப்பார். எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என்றார் ரத்னகுமார்.

> விஜய் குறித்து மிஷ்கின் பேச்சு: “விஜய்... நான் கண்ட லெஜண்ட்!” - ‘லியோ’ வெற்றி விழாவில் மிஷ்கின் புகழராம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE