மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'லூசிஃபர்'. இந்தப்படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இதில், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டோவினோதாமஸ், சாய் குமார் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து தெலுங்கில் ‘காட்ஃபாதர்’ என்ற பெயரில் ரீமேக்கானது. சிரஞ்சீவி, நயன்தாரா நடித்த இதை மோகன்ராஜா இயக்கினார்.
இந்நிலையில் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் 'எம்புரான்' என்ற பெயரில் உருவாகிறது. ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இயக்குகிறார். மோகன்லால் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் பான் இந்தியா முறையில் வெளியாக உள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், ஷான் டைம் சாக்கோ, ராகுல் மாதவ் உட்பட பலர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு லடாக்கில் நடந்து வந்தது. இப்போது அது முடிவடைந்துவிட்டதாக பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.