கொச்சி: மலையாள நடிகர் விநாயகன் தமிழில், திமிரு, சிலம்பாட்டம், மரியான்உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தில் வர்மா என்ற வில்லனாக மிரட்டியிருந்தார். இவர் தனது மனைவியிடம் பிரச்சினை செய்ததாக எழுந்த புகாரில், எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய போலீஸார் அவரை ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். அங்கு வந்த விநாயகன் மதுபோதையில் இருந்துள்ளார். அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளில் அவரை போலீஸார் கைது செய்தனர். பிறகு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய விநாயகன், எதற்காக என்னைக் கைது செய்தார்கள் என்பது தெரியாது என்றார்